திருப்பதி:பரம்பரை அர்ச்சகர்கள் ஓய்வு விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வம்சாவழி அர்ச்சகர்கள் பலர் கைங்கர்யம் செய்துவந்த நிலையில் அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.
அதன் பேரில் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ஆக பணியில் இருந்த ரமண தீட்சிதலு உட்பட வம்சாவழி அர்ச்சகர் பலருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. இது தொடர்பாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வம்சாவழி அர்ச்சகர்களாக பணியாற்றி பணி ஓய்வுக்கு உட்படுத்தப்பட்ட அர்ச்சகர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
அவர்களுடைய முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், அறங்காவலர் குழுவின் முடிவை ரத்து செய்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான வம்சாவழி அர்ச்சகர்கள் அவருடைய ஆயுட்காலம் வரை அர்ச்சகர் கைங்கரியம் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.