இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியா 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன் எடுத்தது. தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 43 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலியும், அஜிங்கியா ரகானாவும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்திலேயே ரகானே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி மட்டும் பொறுப்புடன் ஆடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 25ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.
123 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை, கம்மின்ஸ் அவுட்டாக்கினார். இதை அடுத்து விளையாடிய ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோர் ஓரளவு மட்டுமே தாக்குப்பிடித்தனர். லியானின் ((Lyon)) பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென சரியவே, 283 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
அபாரமாக பந்துவீசிய லியான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 283 ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.
இதில், ஹாரிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரூன் பின்ச் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஷான் மார்ஷ் 5 ரன்னும் பீட்டர் ஹாண்ட்கோம்ப் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவஜா 41 ரன்னுடனும், டிம் பைனி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது.