திருவனந்தபுரம்: மோகன்லால் நடித்த ஓடியன் படத்தின் இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஓடியன் படத்திற்கு எதிராக கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளப்பப்படுகின்றன. படத்தை முடக்குவதற்கான பிரசாரங்களை யாரோ சிலர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை மோகன்லால் நடித்த ஓடியன் படம் வெளியானது. இந்தப் படத்தில் சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டியிருக்கிறார் மோகன்லால். ஆனால் படம் குறித்து கடுமையான கேலியும் கிண்டலுமாக விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அலைமோதுகின்றன.
இது குறித்து ஸ்ரீகுமார் மேனன் கூறிய போது, இது படத்தில் நடித்த மஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடு! நான் பல்வேறு தளங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறேன். சமூக வலைதளங்கள் உள்பட! காரணம் மஞ்சுவாரியார் எனது படத்தில் நடித்திருக்கிறார். இந்தத் தாக்குதல் மஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடு. அவர், பொதுவெளியில் வெளிப்படையாக வந்து இந்தத் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
ஓடியன் படத்துக்கு எதிராக ஒரு கூலிப்படை சமூக வலைதளங்களில் கடுமையாக வேலை செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நான் ஆரோக்கியமான விமர்சனத்தை வரவேற்கிறேன் ஆனால் பெரும்பாலானவர்கள் எந்த காரணமும் இன்றி சமூகவலைதளங்களில் அதை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மனநோயாளிகளாக உள்ள சிலர் கடும் தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார்.