தில்லியில் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
டிச.25ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம். இதை முன்னிட்டு, இன்று வாஜ்பாயின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமான முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கௌரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
தில்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இதில் பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேசிய மோடி, வாஜ்பாய் மறைந்தாலும் அவரின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், “வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்பதை நம்புவதற்கு என்னுடைய மனது மறுக்கிறது. அனைத்து தரப்பினராலும் மரியாதையாக நேசிக்கப்பட்டவர். ஒரு பேச்சாளராக அவர் ஈடு இணையற்றவராக இருந்தார். நாடு உருவாக்கிய முக்கியமான பேச்சாளர்களில் அவரும் ஒருவர்” என்றார் மோடி.