புது தில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வகுப்பு ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படுவது போல், உயர்வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இந் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வருடத்துக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய், மற்றும் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த உயர் வகுப்பினரை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே மேலும் இரு நாட்களுக்கு தொடரை நீட்டித்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.