Home இந்தியா இந்திய மாணவர்களே… உங்கள் செயற்கைக் கோள்களைக் கொடுங்கள்! நாங்கள் ஏவுகிறோம்! ‘இஸ்ரோ’ சிவன் அழைப்பு!

இந்திய மாணவர்களே… உங்கள் செயற்கைக் கோள்களைக் கொடுங்கள்! நாங்கள் ஏவுகிறோம்! ‘இஸ்ரோ’ சிவன் அழைப்பு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நேற்று இரவு பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட் மூலம், மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோளுடன், மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் என்ற குறைந்த ஆயுள் கொண்ட செயற்கைக்கோளையும் ஏவியது. இதை அடுத்து மாணவர்களின் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ தயாராக இருப்பதாக இஸ்ரோ சிவன் கூறினார்.

மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் செயற்கைக் கோள் 1.2 கிலோ எடை கொண்டது. ஆய்வுப் பணிகளுக்கான இந்த செயற்கைக்கோள் குறைந்த ஆயுள் காலம் கொண்டது. பொதுவாக, ஒரு ராக்கெட்டைஏவும் போது துவக்க நிலை உந்து சக்திக்காக ராக்கெட்டைச் சுற்றி ஆறு பூஸ்டர்கள் பொருத்தப்படும். ஆனால் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் குறைந்த எடை கொண்டது என்பதால், முதல் முறையாக, இரண்டு பூஸ்டர்கள் மட்டுமே பொருத்தப்பட்டன.

ராக்கெட்டில் நான்கு நிலைகள் இருக்கும். அதில் கூம்பு போன்ற இறுதி நிலையில்தான் செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப் படும். மூக்கு போன்ற அந்த இறுதி நிலையில் உள்ள தகடுகள் பிரிந்து செயற்கைக் கோள் விண்ணில் நிலை நிறுத்தப் படும்.

செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின், நான்காவது நிலை அங்கேயே சுற்றி வரும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 7 மாதங்கள் இருக்கும். தற்போது, இஸ்ரோ இந்த ராக்கெட்டின் நான்காவது நிலையில் உள்ள பாகத்தில் மாணவர்கள் உருவாக்கிய கலாம்சாட் செயற்கைக்கோளை பொருத்தியுள்ளது. இந்த முயற்சி முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பின், இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், துவக்க நிலை உந்துதலுக்காக இரண்டு பூஸ்டர் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செலவு குறையும். சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, எஸ்எஸ்எல்வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்’ என புதிய வகை ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோ மாணவர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு திறந்தே இருக்கிறது. இஸ்ரோ இந்திய மாணவர்கள் சமூகத்துக்கானது. உங்கள் செயற்கைக்கோள்களை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உங்களுக்காக நாங்கள் விண்ணில் செலுத்தித் தருகிறோம். நாம் இந்தியாவை அறிவியல் நாடாக மாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version