முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை, நாட்டில் பல்வேறு ஊடகங்களும் பல விதமான பார்வையில் பார்த்திருக்க, நியூஸிலாந்தின் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி இப்போது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அந்த நாளிதழில், இந்தியா என்ற செய்தித் தொகுப்பில், படத்துடனான பெட்டிச் செய்தியில், பிரியங்கா வத்ராவின் படத்துடன், ராஜீவ் காந்தியின் மகள் குடும்ப நிறுவனத்தில் இணைந்தார் என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
அதில், பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரசாரத்தில் கைகோக்க, பிரியங்கா காந்தி நீண்ட நாள் எதிர்பார்த்திருந்தபடி இந்திய அரசியலின் இதயப் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார். 48 வயதாகும் பிரியங்காவின் தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் பிரதமர்களாக இருந்துள்ளனர். தற்போது இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த பகுதியான உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
அவர், முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரான தனது சகோதரர் ராகுல் காந்தியிடம் ‘ரிபோர்ட்’ செய்வார். (குடும்ப நிறுவனம் என்பதால்!) – என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த செய்தியில்!
நியூசிலாந்து ஊடகம் துல்லியமாக செய்தியை எடுத்துச் சொல்லியிருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டு கூறி வருகின்றனர்.