கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் சட்டத்தோடு விளையாட கூடாது எனவும் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது தில்லி: விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பித்துக் கொண்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை, மார்ச் மாதம் விசாரணைக்கு ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி 20 முதல் 28 வரை பிரான்சில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அண்மயில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. அத்துடன் எந்தெந்த தேதிகளில் கார்த்தியிடம் விசாரணை நடத்த உள்ளீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ள தேதிகள் குறித்த விவரத்தை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது.
இதனையடுத்து மார்ச் 5,6,7 மற்றும் 12 ம் தேதிகளில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், விளையாடுவதற்காக கார்த்தி சிதம்பரம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், சட்டத்துடன் விளையாடக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
வெளிநாடு செல்ல வேண்டுமானால் கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.