புது தில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் என வகையாக சிக்கிக் கொண்டிருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா குறித்த வழக்கில், அந்நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சிதமப்ரம் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணியும், அவரது கணவர் பீட்டரும் கைது செய்யப்பட்டனர். இந்திராணி முகர்ஜி தற்போது மும்பை பைகுலா சிறையில் பெண்களுக்கான சிறையில் காவலில் இருக்கிறார். தற்போது, மகள் கொலை தொடர்பான வழக்கை சந்தித்து வருகிறார் இந்திராணி முகர்ஜி.
இந்நிலையில் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அப்ரூவராக விரும்புவதாகவும் இந்திராணி தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து பிப்.7 இன்று இந்திராணியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்திராணி முகர்ஜி இன்று ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவர் ஐஎன் எக்ஸ் மீடியாவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக வெளிநாடு முதலீடுகள் பெறப்பட்டதாக 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றவாளிகளாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
இதை அடுத்து இந்திராணியிடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் போது, முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக இந்திராணி கூறி இருந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏற்கெனவே முன்ஜாமின் பெற்றுள்ளனர். நீதிமன்றத்தின் தயவில் முன் ஜாமீன் நாட்களை நீட்டித்துக் கொண்டே சென்று வருகின்றனர். நீதிமன்றத்தின் தயவில் வெளிநாடுகளுக்கும் பறந்து போய் விளையாடி வருகிறார் கார்த்தி சிதம்பரம்.
தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதாகக் கூறப் படுவதால், ப.சிதம்பரம் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.