காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தைப் பறித்துள்ளது.
தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து அருண்ஜேட்லியும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது கூறிய அவர், பயங்கரவாதத் தாக்குதலுக்கு துணை போனவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்! மறுக்க இயலாத வகையில் இந்தச் செயலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது. எனவே, தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்துள்ளது. இதேபோல, சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.. என்று கூறினார்.
பாஜக.,வின் மூத்த தலைவரான சுப்பிரமணியம் சுவாமி, வெகுகாலமாகவே பாகிஸ்தானுக்கு இந்த சலுகைகள் தருவதை நிறுத்த வேண்டும் என்று பொதுவில் வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற எம்.எஃப்.எம். ஸ்டேடஸை வழங்கியிருந்தது. அது தற்போது இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னர் பறிக்கப் பட்டிருக்கிறது.