என் அன்புநிறை நாட்டுமக்களே, நம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி பாய் தேசாய் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 29ஆம் நாள். இந்த நாள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.
உள்ளபடியே, அமைதி நிரம்பிய நபரான மொரார்ஜி பாய் அவர்கள் மிக ஒழுங்குமுறை நிரம்பிய நாட்டின் தலைவர்களில் ஒருவர். சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் மிக அதிகமாக வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த சாதனை மொரார்ஜி பாய் தேசாய் அவர்களையே சாரும். மொரார்ஜிபாய் தேசாய் மிகக் கடினமான வேளையில் பாரதத்துக்கு திறன்மிகு வகையில் தலைமை தாங்கினார்,
அந்தக் காலகட்டத்தில், நாட்டின் மக்களாட்சி முறை பெரும் அச்சுறுத்தலில் இருந்தது. இதன் பொருட்டு இனிவரும் தலைமுறையினரும் கூட நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் ஜனநாயகத்தின் பாதுகாக்க வேண்டி அவசரநிலைக்கு எதிராக தன்னையே அர்ப்பணித்தார்.
இதற்காக தனது வயோதிகத்தில் அவர் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. அப்போதிருந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது தேசத்தின் பிரதமரானார் அவர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இது ஏன் மகத்துவம் நிறைந்தது என்றால், அவசரநிலையை பிறப்பிப்பதற்காக 42ஆவது அரசியல்சட்டத் திருத்தம் அப்போது கொண்டு வரப்பட்டது, இதில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பது தவிர, அதில் இடம் பெற்றிருந்த வேறு சில ஷரத்துக்கள், நம்முடைய ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்துவிட்டன, எனவே அவை திரும்பப் பெறப்பட்டன.
அதாவது 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் செயல்பாடுகளை, செய்தித்தாள்களில் அச்சிட அதிகாரம் வழங்கும் ஷரத்து ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, உச்சநீதிமன்றத்தின் சில அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்பட்டன.
44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் உட்பிரிவு 20, 21க்கு உட்பட்டு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகள், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டாலும் கூட, பறிக்கப்பட முடியாத வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அமைச்சரவை எழுத்து வடிவில் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசுத்தலைவர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த முடியும் என்ற வழிமுறை முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அவசரநிலையின் கால அளவை ஒரு முறையில் 6 மாதங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது. அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, 1975ஆம் ஆண்டு எப்படி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதோ, அது மீண்டும் அரங்கேற முடியாமல் தடுக்க இந்த வகையில் மொரார்ஜி பாய் அவர்கள் உறுதிசெய்தார்.
இந்திய ஜனநாயகத்தின் மாட்சிமையைப் பாதுகாக்க அவரது பங்களிப்பு மகத்தானது, இனிவரும் தலைமுறையினர் அதை என்றுமே நினைவில் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவருக்கு மீண்டும் ஒருமுறை நான் என் ச்ரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்