காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்கக் கோரிய வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இந்தியாவில் காஷ்மீர் மாநிலம் மட்டும் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக, விசேஷ அந்தஸ்து பெற்ற மாநிலமாகத் தொடர்கிறது. இதற்காக, 35ஏ சட்டப்பிரிவினை அப்போதைய குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். நாடாளுமன்ற சட்ட வரைவு ஏதுமின்றி, குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு அறிவிக்கப்பட்ட சட்டப் பிரிவு, அம்மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது. இந்தியாவில் பிற பகுதிகளில் இல்லாத சட்டப் பிரிவு இது.
இதன்படி, மத்திய அரசு அனுமதி இன்றி, நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி எந்த ஒரு சட்டத்தையும் காஷ்மீர் அரசு உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சட்டங்கள் இந்தியாவின் பிற பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மத்திய அரசால் அதை எதுவும் செய்ய முடியாது.
இந்தச் சட்டப் பிரிவு, அரசியலமைப்புப் படி முறையாக கொண்டு வரப்படாமல், 1954ல் குடியரசுத் தலைவர் அறிவிப்பு மூலம் கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதால், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக இந்தப் பிரிவினை நீக்கக் கோரி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்ததால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த ஆட்சியும் கூட்டணி ஆட்சியாக இருந்ததால், ஒரு முடிவு எடுக்க இயலாமல் தள்ளாடியது. ஆனால் தற்போதைய பாஜக., தலைமையிலான அரசு, பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், பல சட்ட பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும், மாநிலங்களவையில் உறுப்பினர் பலம் இன்மையால் அதற்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், இந்த சட்டப் பிரிவினை எதிர்த்து பலர் குரல் எழுப்பினர். உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் பல தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல் நடைபெறுகிறது.
இதனால் காஷ்மீரில் தற்போது பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 100 கம்பெனி ராணுவப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் வாழ்க கோஷம் போட்டுக்கொண்டு, பாகிஸ்தானுடன் காஷ்மீரை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வன்முறைகளை மக்களிடம் திணித்து வருகின்றனர். அப்படி இருக்க, இந்திய ஆளுகையின் கீழ், இந்தியாவின் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, சிறப்பு அந்தஸ்தும், விசேஷ சட்டங்களும் ஏன் விரும்புகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் தேசியவாதிகள்.