பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது அதிர்ச்சியூட்டும் செய்திதான்!
விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை! வளர்ந்தது சென்னையில்! தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. இவர் விங் கமாண்டர் விமானி. இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர். அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார்.
2004ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானப் படைக்கு முதற் கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வட மாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார்.
அபிநந்தனின் பூர்வீகம் திருண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
அபிநந்தன் மிகவும் துணிச்சல் மிக்கவர். இவர் அவ்வளவு எளிதில் பாகிஸ்தானியர்களிடம் சிக்கவில்லை…விதி! பால்கன் 16 என்ற அதிக திறன் கொண்ட பாகிஸ்தான் தாக்குதல் விமானத்தை, மிக் ரக விமானத்தின் உதவியுடன் விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தி வீழ்த்தியுள்ளார்.
பதில் தாக்குதலில் விமானம் சேதம் அடைந்த நிலையில், தற்காப்புக்காக சீட் எஜக்ட் செய்ய, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் லேண்ட் ஆகிவிட்டார்.! ஆனாலும், மனுஷனுக்கு தில் அதிகம்தான் என்கிறார்கள்! அங்குசத்தை வைத்து யானையை மிரட்டுவது போன்று மிரட்டியுள்ளார் இவர் என்று பெருமைப் படுகிறார்கள்.
இவரை பாகிஸ்தானியர்கள் சித்ரவதை செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவற்றை பாகிஸ்தானே வெளியிட்டுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. சர்வதேச போர் விதிகளின் படி, அபிநந்தனை கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் அவருக்கு எந்த வித சித்ரவதைகளும் கொடுக்கக் கூடாது என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் ஒலித்து வருகின்றன.