புதன் கிழமை நேற்று இரவு விமானம் மூலம் கோழிக்கோடு வந்த ராகுலை காங்கிரஸார் சிறப்பாக வரவேற்றனர். கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றனர்.
அவருக்கு முன்னதாகவே வந்திருந்த பிரியங்காவும், ராகுலும் கோழிக்கோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர். பின் இன்று காலை வயநாட்டுக்கு இருவரும் ஹெலிகாப்டரில் வந்தனர். பின்னர் கல்பாத்தியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் இன்று மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 23-ம் தேதி வயநாட்டில் வாக்குப் பதிவு நடைபெறு கிறது.
ராகுலின் வருகையை ஒட்டி கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டிருந்தது.’
உ.பி.யில் உள்ள அமேதியில் 4வது முறையாக தொடர்ந்து போட்டியிடும் ராகுல், முதல் முறையாக வயநாட்டிலும் சேர்ந்து இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தாம் ஏன் வயநாட்டில் போட்டியிடுகிறேன் என்பதற்கு ”தென்னிந்தியாவை மோடி புறக்கணிக்கிறார். உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதைக் காட்டவே வயநாட்டில் போட்டியிடுகிறேன்” என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது கூறியிருந்தார் ராகுல்!
இதனிடையே, வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரத் தர்ம ஜன சேனா கட்சித் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.
இதனிடையே, தாம் சிபிஎம் கட்சிக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும், தமக்கு மோடியே எதிரி என்றும், எனவே தாம் சிபிஎம் வேட்பாளருக்கு எதிராகவோ, சிபிஎம் கட்சிக்கு எதிராகவோ, ஆளும் மாநில அரசுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட தேர்தல் பிரசாரத்தின் போது பேசப் போவதில்லை என்று தெளிவாகக் கூறினார் ராகுல்.