எந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை பொய்யாக சிக்கவைத்து, கைது செய்து சித்ரவதை செய்த ஹேமந்த் கார்கரேவுக்கு தாம் சாபம் கொடுத்ததாகவும், அந்தக் கர்மாவினால்தான் அதே பயங்கரவாதிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சாத்வி பிராக்யா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
அசோக சக்ரா விருது பெற்ற கார்கரே குறித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர் இதை அடுத்து, சாத்வியின் கருத்துக்கும், பாஜக.,வுக்கும் தொடர்பில்லை என்றும், அது அவர் அனுபவித்த வேதனைகள், வலிகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அவர் கூறிய கருத்து என்றும் கூறி, ப்ரக்யா சிங் தாக்குர் தெரிவித்த கருத்தில் இருந்து கட்சியை விலக்கிக் கொண்டது பாஜக.,!
இந்நிலையில், எனது கருத்தால், இந்த நாட்டின் எதிரிகள் அதை அரசியலாக்கி அதன் மூலம் லாபம் தேட முயற்சி செய்கின்றனர் என்பதால், நான் எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இது எனது சொந்த தனிப்பட்ட வலிகளின் உணர்வு… என்று கூறியுள்ளார் சாத்வி ப்ரக்யா தாக்குர்.
மேலும், எதிரி நாட்டு பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களால் பலியான கார்கரே நிச்சயமாக நாட்டுக்காக உயிரைத் தந்த வீரர்தான் என்று சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.