அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதி கொண்டு இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் தங்கப் பதக்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்து.
‘ஒரு பாப்பா ஓடிவந்து டிவி பாக்க சொன்னா, எனக்கு டிவி போட தெரியாது; எல்லாரும் வந்து கோமதி ஓடி ஜெயிச்சுருக்குனு சொன்னாங்க, சந்தோஷமா இருக்கு’ என்று கோமதி மாரிமுத்துவின் தாயார் ராசாத்தி..
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்திற்கான பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்திருப்பதற்கு பாராட்டுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் அவர் சர்வதேசப் போட்டிகளில் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கும் தமிழர்க்கும் கௌரவம் தேடித் தந்துள்ள கோமதியை வாழ்த்துவதாக அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் -ஏபிவிப் மாணவர் இயக்கமும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.