கோல்கத்தா: கடந்த மே 14 ம் தேதி பாஜக., தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியின் போது, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக., தொண்டர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்கத்தின் சமூக சீர்திருத்த வாதியாகத் திகழ்ந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப் படுத்தப் பட்டது.
இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் தொண்டர்கள்தான் சிலையை சேதப் படுத்தினர் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? அதனை மோடி தருவாரா என்று கேள்வி எழுப்பினார்.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின், மந்திர் பஜார் என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ”சிலை அமைக்க எங்களிடமே போதுமான பணம் உள்ளது. நாங்களே ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையை அமைத்துக் கொள்வோம். பாஜக., வங்கத்தின் 200 ஆண்டு கால பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது. அவர்கள் திரிபுராவிலும் சிலைகளை உடைத்தார்கள். இங்கும் சிலைகளை உடைத்துள்ளார்கள். வங்க மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி தருவார்கள்,” என்றார்.
மேலும், மோடி பெரிய பொய்யர். அதற்கு பரிகாரமாக அவர் காதுகளில் கைவைத்து 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என்று கூறினார்.