புது தில்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நாளான நாளை, வன்முறைகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கான 542 தொகுதிகள், சில மாநில சட்டசபைகள், சட்டமன்ற இடைத்தேர்தல் என தேர்தல் நடத்தப் பட்டு, அவற்றுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்த அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள், மாநில மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இருப்பினும், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப் பதிவின் போதே வன்முறைகள் தாண்டவமாடியதாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மத்திய அரசுக்கு சாதகமாக வந்திருப்பதாலும், வன்முறைக்கு சில இடங்களில் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் காவல் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாளை பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பு இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கூறியுள்ளது.