ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கு கடந்த மாதம் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 170 தொகுதிகளில், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 88 இடங்கள் இருந்தாலே போதும். இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. எனவே சந்திரபாபு நாயுடு பெரும் சரிவைச் சந்தித்து, ஆட்சியை இழக்கிறார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த ஐந்து வருடங்களில், தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தினார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அதேநேரம், மறுபுறம் மக்களிடையே தன் செல்வாக்கைக் கொண்டு செல்வதிலும் அதிக கவனம் செலுத்தினார்.
இதன் காரணமாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில் மீண்டும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.
ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்த ஜெகன் மோகன் ரெட்டி: மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 149 இடங்களிலும், தெலுங்குதேசம் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை. ஆளும் கட்சியான தெலுங்குதேசத்திற்கு ஏற்பட்ட இந்த பின்னடவை அடுத்து முதல்வர் பதவியை இன்றே ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு.