குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக.,வின் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட நரேந்திர மோதி.
17வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது *வரும் 30ஆம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோதி.
முன்னதாக பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 303 எம்.பி.,க்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் அதிமுக., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சேர்த்து, மொத்தம் 50 எம்.பி.,க்கள் உள்ளனர்.
இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நரேந்திர மோதி, பாஜக., தலைவர் அமித்ஷா, பாஜக., மூத்த தலைவர் லால்கிஷன் அத்வானி, அகாலிதள தலைவர் பிரகாஷ்சிங் பாதல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், அதிமுக., எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் புதிய அரசின் திட்டங்கள் மற்றும் அமைச்சரவை குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டன.
தொடர்ந்து நாடாளுமன்ற பாஜக., தலைவராகத் தேர்வு செய்யப் பட்ட நரேந்திர மோதி, ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.