அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து வரும் நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து சனிக்கிழமை நேற்று மீண்டும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் அல்கா லம்பா. தில்லி சாந்தினி சௌக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அல்கா லம்பா வலியுறுத்தினார். ஆனால் அவ்வாறு கூட்டணி அமையவில்லை. இதனால் ஆம் ஆத்மி தில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதை அல்கா லம்பா விமர்சித்தார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வாட்ஸ் அப் குழுவில், ஒடிஸாவின் முதல்வராக ஐந்தாவது முறையாக தேர்வான நவீன் பட்நாயக் குறித்து பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார் அல்கா லம்பா. இதை அடுத்து, வடகிழக்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டே அந்தக் குழுவில் இருந்து அல்காவை நீக்கியுள்ளார்.
இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அல்கா லம்பா.
இன்னொரு மாநில முதல்வரின் செயல்பாட்டை பாராட்டி எம்.எல்.ஏக்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததற்காக ஒரு எம்.எல்.ஏ.,வை நீக்கும் அளவுக்கு கருத்துச் சுதந்திரமும், சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.