பதான் (உ.பி.) உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் 18 மாத பெண் குழந்தை ஒன்று, பக்கத்து வீட்டுக்காரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் நேற்று இரவு 18 மாதக் குழந்தையை பக்கத்து வீட்டுக் காரரான சஞ்சய் ஜோஷி என்ற நந்தா மறைவான இடத்துக்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கே வைத்து அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அன்று அந்தக் குழந்தை இரவு முழுவதும் வலியால் அழுது கொண்டே இருந்தது. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள் இன்று காலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் அந்தக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த குழந்தையின் பெற்றோர் இது குறித்து காவல்துறையில் புகார் செய்தனர். அவர்களது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நந்தாவை கைது செய்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.