ஐந்து ஆண்டுகள் ஆந்திர முதலமைச்சராக பதவி வகித்த சந்திரபாபு நாயுடு தெலங்கானாவில் கட்டிய காளேஸ்வரம் திட்டத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்று முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
நீர்ப்பாசனத் திட்டத்தின் மீது சட்டப்பேரவையில் நிகழ்ந்த விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட தீவிர விவாதமானது, பின்னர் வார்த்தைப் போராக வெடித்தது.
எதிர்க்கட்சியில் இருந்த போது காளேஸ்வரம் திட்டத்தை எதிர்த்து மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த ஜகன் முதலமைச்சர் ஆனதும் அந்த திட்டத்தின் திறப்பு விழாவிற்கு சென்றது ஏன்? என்று தெலுகு தேசம் கட்சி கிண்டலடித்து.
அதற்கு பதிலளித்த ஜகன், ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, காளேஸ்வரம் திட்டத்தை ஏன் தடுக்க முன்வரவில்லை? ஐந்து ஆண்டுகளும் நாயுடு என்ன கழுதை மேய்த்தாரா? என்று கேட்டார்.
சந்திரபாபு அரசாண்ட காலத்தில் ஆல்மட்டி அணையின் உயரத்தை உயர்த்திய போது ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டார் ஜெகன்.
“பத்தாண்டுகளாக ஆந்திராவுக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்து விட்டது. இது சந்திரபாபு நிர்வாகத்தின் விளைவுதான்! நாங்கள் அண்டை மாநிலத்துடன் நட்போடு கொடுத்து வாங்கும் விதத்தில் நடந்து கொள்கிறோம். சண்டை சச்சரவை வளர்த்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது” என்று ஜெகன் விவரித்தார்.
தான் அரசாட்சிக்கு வந்தமர்ந்த போது, அந்த திட்டம் நிறைவடைந்து விட்டது என்றும் அந்த திட்டத்தை தொடக்கத்திலேயே தடுக்காத தெலுங்கு தேசம் இப்போது தன் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்வதாகவும் ஜெகன் கொஞ்சம் கடுப்பாகி, எரிந்து விழுந்தார்.
மைத்துனன் ஹரிகிருஷ்ணா இறந்தபோது சவத்தை அருகில் வைத்துக் கொண்டு கேசிஆரோடு கூட்டணி பற்றிப் பேசிய நாயுடு, தன்னை விமர்சிப்பது விந்தையாக உள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்களும் நட்போடு விளங்குவதைப் பார்த்து வாழ்த்துவதை விட்டுவிட்டு விமர்சிப்பது தகுந்த செயல் அல்ல என்றார் ஜெகன்.