என்ன ஒரு அருமையான தீர்ப்பு!.. என்று புளகாங்கிதம் அடையவில்லை மக்கள். மாறாக விமர்சிக்கிறார்கள் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் மனீஷ் குமாரின் தீர்ப்பைக் கேள்விப் பட்டு!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரிச்சா பாரதி என்ற முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
தப்ரீஸ் அன்சாரி மரணத்திற்கு பழிவாங்க அன்சாரியின் மகன் பயங்கரவாதியானால், என்ன செய்வீர்கள் என்பது போன்ற டிக்டாக் பதிவுகளை விமர்சித்த ரிச்சா பாரதி, காஷ்மீர் பண்டிட்கள் யாரும் பயங்கரவாதி ஆகவில்லையே என கருத்தைப் பதிவு செய்தார்.
நீதிமன்றத்தின் விசாரணையில், அவருக்கு பிணை வேண்டும் என்றால், ஐந்து குரான் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று ராஞ்சி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி மனீஷ் குமார் தீர்ப்பு வழங்கினார். அந்த ஐந்து பிரதிகளில், ஒரு பிரதியை அஞ்சுமன் இஸ்லாமியா கமிட்டிக்கு நகர நிர்வாகம் மூலமாகவும், நான்கு பிரதிகளை காவல்துறை மூலம் நூலகங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
மேலும் இரு சமுதாய பிரதிநிதிகளும் சமாதானம் செய்து, அதை நீதிமன்றத்தில் தெரிவித்தால் பிணை வழங்குவதாகக் கூறினார் நீதிபதி.
ஆனால், தம்மால் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார் ரிச்சா பாரதி!
‘இன்று குரான் விநியோகம் செய்யக் கூறியுள்ளது நீதிமன்றம். நாளையே தொழுகை நடத்தச் சொல்வார்கள்! பிறகு மதம் மாறச் சொல்வார்கள்’ என்று மறுத்துள்ளார் ரிச்சா பார்தி.
ரிச்சாவின் இந்தச் சூழ்நிலையைக் கண்டு கொதித்துப் போன இந்து இயக்கங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. அவரை விடுவிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதே நேரம், நீதிமன்றத்தில் உத்தரவானது 15 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்று கூறியுள்ளார் ரிச்சா பார்தியின் வழக்குரைஞர் ராம் பர்வேஷ் சிங்.
ரிச்சாவு விவகாரத்தில் உள்ளூர் பாஜக., தலைவர்கள், இந்து இயக்கங்களின் தலைவர்கள் ராஞ்சி நீதிமன்றத்தின் கருத்தின் மீது தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் கருத்து கூறும் சிலர், இதே தீர்ப்பை மாற்றி பகவத் கீதை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் 24*7 இதைத் தான் பேசிக் கொண்டிருக்கும். மொகலாயர் ஆட்சியில் மதம் மாறினால், குரான் வாசித்தால் தண்டனை குறையும் என்பது விதியாக இருந்தது. அது சுதந்திர இந்தியாவிலும் சில நீதிபதிகளின் மூளையில் அமர்ந்துகொண்டிருக்கிறது துரதிருஷ்டம்….
” வகுப்புவாதிகளுக்கு சட்டம் வளைந்து கொடுத்தால் நாடு கற்காலத்திற்கு சென்று விடும்” – டாக்டர் அம்பேத்கர் கூறியதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.