விஜயவாடா: பயணி மறந்து விட்டுச் சென்ற பணப்பையை திரும்ப ஒப்படைத்து தன் நேர்மையை நிரூபித்துக் கொண்டார் விஜயவாடாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர். அவருடைய நேர்மையை பாராட்டிய போலீசார் அவருக்கு பரிசளித்தனர்.
தன் ஆட்டோவில் ஏறிய பயணியின் 2.15 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்து தன் நேர்மையை ஆட்டோ டிரைவர் ஒருவர் நிரூபித்துக் கொண்டார். இந்தச் சம்பவம் விஜயவாடா ஒன்டௌன் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று நடந்தது.
இது குறித்து போலீஸார் கூறியபோது… சித்தூர் ஜில்லா நகரியைச் சேர்ந்த கோதண்டராம், தன் மகள் நிஹாரிகாவின் எம்பிபிஎஸ் கௌன்சலிங்கிற்காக ஞாயிறு அன்று விஜயவாடா வந்துள்ளார். கவர்னர் பேட்டையில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய அவர்கள் கனகதுர்கா அம்மனை தரிசிப்பதற்கு ஆட்டோவில் சென்றார்கள்.
கோவில் தரிசனத்திற்கு செல்லும் அவசரத்தில் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச் சென்றார்கள். தரிசனத்துக்குப் பிறகு தான் பணப் பை காணாமல் போன விஷயத்தை அறிந்தார்கள். ஆட்டோவில் விட்டு விட்டு வந்து விட்டோம் என்று உணர்ந்த கோதண்டராம் உடனே போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் ஏறிய ஆட்டோவின் எண் தெரியாததால் சற்று நேரம் குழம்பியுள்ளனர்.
இந்நிலையில், அவர் ஏறிய ஆட்டோ பயணித்த வழிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் பரிசோதித்து பார்த்தனர். கோதண்டராம் ஏறிய ஆட்டோவின் பின்னால் ஆத்ம பந்து என்று எழுதிய போஸ்டர் காணப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் அந்த ஆட்டோவை கண்டு பிடிக்க முயன்றனர்.
அதே நேரம், மாலை 4 மணிக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் தன் வீட்டிற்குச் சென்ற பின் ஆட்டோவில் ஒரு பை இருப்பதைப் பார்த்தார். அதனைத் திறந்து பார்க்கையில் பெருமளவில் பணமும் சில சான்றிதழ்களும் இருப்பதைக் கண்டார். உடனே இன்னும் சில ஆட்டோ டிரைவர்களையும் அழைத்துக் கொண்டு, ஒன்டௌன் காவல் நிலையம் சென்றார். அங்கே காவலர்களிடம் தன் ஆட்டோவில் பயணி தவற விட்டது என்று கூறி பையை ஒப்படைத்தார்.
இதை அடுத்து, எஸ்ஐ காசிவிஸ்வநாத் முன்னிலையில் வெங்கடேஷ் அந்தப் பையை கோதண்டராமிடம் அளித்தார். பயணி தவற விட்ட பொருளை தாமாகவே முன் வந்து, திரும்பக் கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டிய போலீசார் வெகுமதி அளித்தனர்.