4 வயது சிறுவன் ஜஷித் கடத்தப் பட்டதன் பின்னுள்ள சதி என்ன?
மண்டபேட்டையைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஜஷித் கடத்தப்பட்ட வழக்கில் பல சந்தேகங்கள் வெளிப்பட்டுள்ளன. சிறுவனின் கடத்தலின் பின் கிரிக்கெட் பெட்டிங் கும்பலின் கை உள்ளதா என்ற கோணத்தில் அலசி வருகிறது காவல்துறை.
கிழக்கு கோதாவரி மாவட்டம் மண்டபேட்டையில் நான்கு வயது சிறுவன் ஜஷித் கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீட்கப்பட்டான். சிறுவனை கடத்திச் சென்றவர்கள் மூன்று நாட்கள் வைத்திருந்து சிறுவனை அனுப்பியதில் பெற்றோருக்கு ஏதாவது எச்சரிக்கை விடுக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெற்றோர் இருவரும் வங்கியில் பணி புரிகின்றனர். தந்தை வெங்கட்நாராயணா ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். மண்டபேட்டை, அனபர்த்தி போன்ற இடங்கள் கிரிக்கெட் பெட்டிங்கிற்கு பெயர் போனவை. யாராவது பணம் தராமல் ஏமாற்றினால் பலவந்தமாக வசூல் செய்வதற்கு அவர்களிடம் தனிப்பட்ட முரட்டு கும்பல் உள்ளது.
அவ்வூரில் செங்கல் சூளையில் வேலை செய்பவர்கள் விடியற்காலையில் தங்கள் ஊர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து வியந்தனர். ஏற்கனவே மூன்று நாட்களாக அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் சிறுவனின் போட்டோவும் கடத்தல் விவரங்களும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்ததால் அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிறைமாத கர்ப்பிணியான ஜஷீதின் தாயிடம் சிறுவன் நலமாக ஒப்படைக்கப் பட்டதில் கதை சுபமாக முடிந்தது.
இந்த வழக்கை சவாலாக எடுத்துக் கொண்டு பதினாறு டீம்களை இந்த பணியில் அமர்த்தியது காவல்துறை. நன்கு திட்டமிட்டு இருபது நாட்கள் கண்காணித்து சிறுவனை அவர்கள் கிட்நாப் செய்திருப்பதாகத் தெரிகிறது.
அருகில் இருந்த வீடுகளில் சிசிடிவி புட்டேஜ் மூலம் இருவர் மோட்டர் பைக்கில் அடிக்கடி வந்து சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை ஏதோ ஒரு காரணம் கூறி “வீடு வாடகைக்கு உள்ளதா?” என்பது போல் கேட்டு நோட்டமிட்டுச் சென்றதை போலீசார் அறிந்து கொண்டார்கள்.
பையனின் வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குலுகுலூரு என்ற இடத்தில் சிறுவனை விட்டுச் சென்றுள்ளார்கள். அங்குள்ள செங்கல் சூளைக்கு பின்தான் மறைவாக கிரிக்கெட் பெட்டிங் செய்வது வழக்கமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு பற்றி காவல்துறையை பாராட்டிய முதல்வர் ஜகன் 50% வேலைதான் முடிந்துள்ளது. இன்னும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டி உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
ஜூலை 22 அன்று மாலை தன் பாட்டி பார்வதியோடு தன் வீட்டருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது எல்கேஜி படிக்கும் ஜஷீத் கடத்தப் பட்டான்.
கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த ஒருவன் பார்வதியிடம் வந்து ‘கரன்ட் இல்லையா?’ என்று கேட்க அவர் திரும்பிப் பார்க்கும் போது முகத்தில் ஒரு அறை விட்டு விட்டு பையனோடு தயாராக ஹெல்மெட் அணிந்து மோட்டர் பைக்கில் அமர்ந்திருந்த இன்னொருவனோடு சேர்ந்து மறைந்து விட்டான்.
கொஞ்சம் தூரம் அதன் பின்னாலேயே ஓடிய பார்வதி பெரிதாக குரல் கொடுக்கவே அண்டை வீட்டார்கள் வந்து, துரத்தியும் மோட்டர் பைக்கைப் பிடிக்க இயலவில்லை.
தொடர்ந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஜஷிதின் வீடு, எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு அவர்களையும் விசாரித்து விவரங்களை அறிந்துகொண்டனர்.
மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர வேட்டையில் இறங்கினார்கள்.
தாயின் கரங்களில் திரும்ப கிடைத்த ஜஷீத், தான் கடத்தப்பட்ட விவரங்களை மழலை மொழியில் விவரித்தான். அவனை யாரும் அடிக்க வில்லையாம். தினமும் இட்லி மட்டுமே சாப்பிட கொடுத்தார்களாம். அதில் ஒரு ராஜு அங்கிளைத் தனக்கு தெரியும் என்றான்.
சிறுவனைத் தாயின் கரங்களில் ஒப்படைத்த காவல்துறையை பொதுமக்கள் பாராட்டினர்.