காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்நாள் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் கூறியதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்து கள நிலவரத்தை கவனிக்க, தாம் ஒரு விமானம் அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு “முட்டாள்” போல் பேசிக் கொண்டிருந்த தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரின் நடத்தை குறித்து ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார் ஆளுநர் சத்யபால் மாலிக்.
“ராகுல் காந்தியை இங்கு வருமாறு அழைத்தேன். இங்கு வந்து நிலைமையை கண்காணிக்கவும்! பின்னர் பேசவும்! அதற்காக நான் உங்களுக்கு ஒரு விமானத்தை அனுப்புகிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான நபர், நீங்கள் இப்படி பேசக்கூடாது” என்று மாலிக் கூறினார்.
காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு சத்யபால் மாலிக் பதிலளித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரிலிருந்து அங்குள்ள வன்முறைகள் குறித்து சில தகவல்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப் பட்டதில், வகுப்புவாத அல்லது மதவாத கண்ணோட்டம் ஏதும் இல்லை என்றார் ஆளுநர்.
“பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை அகற்றுவது அனைவருக்குமாகவே உள்ளது. லே, கார்கில், ஜம்மு, ராஜோரி-பூஞ்ச் ஆகியவற்றில் அதை அகற்றுவதில் இனவாத கோணம் இல்லை! வகுப்புவாத கோணமும் இல்லை” ன்றார்.
காஷ்மீர் வதை முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், படித்திருந்த போதும் வதை முகாம் என்பதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்றார்.
“அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் 30 முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் அதை ஒரு வதை முகாம் என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் அவசர காலங்களில் மக்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர், ஆனால் யாரும் அவர்களை அதனைச் சொல்லி வதை முகாம்கள் என்று அழைக்கவில்லை. தடுப்புக் காவல் ஒரு வதை முகாமுக்கு சமமா” என்று கேள்வி எழுப்பினார் சத்யபால் மாலிக்!