தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை இரண்டையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப் படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 அதிகரிக்கப் பட்டு, ரூ.32 ஆகிறது. எருமைப் பால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது.
இதை அடுத்து, ஆவின் பால் விற்பனை விலையும் லிட்டருக்கு ரூ.6 உயருகிறது. இந்த விலை உயர்வு, வரும் திங்கள்கிழமை முதல் ஆக.19ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பசும் பால் கொள்முதல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.28 ஆக இருந்தது. இது இனி ரூ 4 அதிகரித்து, ரூ. 32 ஆகிறது.
எருமைப் பால் கொள்முதல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.35 ஆக வழங்கப் பட்டது. .அது இனி ரூ. 6 உயர்ந்து ரூ.41 ஆகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய போது,
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பால் விலை உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வால் பால் உற்பத்தி யாளர்கள் 4.60 லட்சம் பேர் பயனடைவர் என்றார்.
இதனிடையே, பால் கொள்முதல் விலையை குறைந்த அளவு உயர்த்தியது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தோம் என்றும், சங்க செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.