விஷ்ணு காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதனால் நகரில் குப்பைகள் அதிகமாகி, உள்ளூர் வாசிகள் பெரும் சிரமப் பட்டனர். இதை அடுத்து, நகரை சுத்தப் படுத்தும் முயற்சியில் தன்னார்வத் தொண்டர்கள் இறங்கினர். தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,ஸின் சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினர்.
அத்திவரதர் நிகழ்ச்சிக்கு பின் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை இன்று (18.8.2019) மகாசேவா நடைபெற்றது. நேற்று இரவு முதல் காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சேவாபாரதியைச் சேர்ந்த தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் காஞ்சிபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள 60 தெருக்கள் 3 குளங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணியில் 700க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்மகுமார், R. சீனிவாசன், பிரகாஷ், சேவாபாரதி மாநில அமைப்பாளர் கா. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.