அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவிகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதனை திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் தங்க.தமிழ்செல்வன் நியமனம்! கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் நியமனம்! கழக நெசவாளர் அணிச் செயலாளர் பொறுப்பில்கே.எம்.நாகராஜன் நியமனம் என திமுக., அதிரடி காட்டியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.இராசா ஆகியோருடன் இணைந்து, கட்சி சட்டதிட்ட விதி 26ன்படி தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கட்சி சட்டதிட்ட விதிகளின்படி, திமுக இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நெசவாளர் அணிச் செயலாளராக, கோவை மாவட்டம் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த கே.எம். நாகராஜன் நியமிக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்சிப் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியும் கேட்டு நான் திமுகவில் இணையவில்லை; கட்சியின் கொள்கை பொறுப்பு செயலாளர் பதவி வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார்.
திமுக., கொள்கை பரப்புச் செயலாளர் என தனக்கு கட்சிப் பதவி வழங்கப் பட்ட பின்னர், மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
முன்னதாக, அமமுக.,வில் இருந்து வெளியேறி திமுக.,வில் சேர்ந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது அவர், கொள்கையே இல்லாத தினகரன் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கேள்வி கேட்டு அதிர வைத்தார்.
மேலும், பதவியை எதிர்பார்த்தே தாம் திமுக.,வில் இணைவதாகவும், ஸ்டாலின் எனக்கு ஏதாவது பாத்து செய்வார் என்ற ரீதியில் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.