காஷ்மீர் பிரச்சினையில் இஸ்லாமாபாத் தனது நிலைப்பாடு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொண்டதன் மூலம், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பிரிகேடியர் இஜாஸ் அகமது ஷா.
இம்ரான் கான் உட்பட பாகிஸ்தான் “ஆளும் உயர் வர்க்கம்” நாட்டின் அடையாளத்தை சீரழித்துவிட்டதாக ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச சமூகம் நம்மை நம்பவில்லை. அவர்கள் [இந்தியா] ஊரடங்கு உத்தரவு விதிக்கிறார்கள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மருந்துகள் கொடுக்கவில்லை என்று நாங்கள் கூறுகிறோம். மக்கள் எங்களை நம்பவில்லை, ஆனால் அவர்களை நம்புகிறார்கள்! ஆளும் உயர் வர்க்கம், இந்த நாட்டை அழித்துவிட்டது. இந்த நாட்டின் ஆளும் உயர் வர்க்கம், நம் பெயரை அழித்தது. நாம் ஒரு தீவிரமான நாடு அல்ல என்று மக்கள் நினைக்கிறார்கள், ”என பிரிக் ஷா புதன்கிழமை நேற்று பாகிஸ்தான் செய்தி சேனலான ஹம் நியூஸில் ஒரு உரை நிகழ்ச்சியின் போது கூறினார்.
இம்ரான் கான், பெனாசிர் பூட்டோ, பர்வேஸ் முஷாரஃப் மற்றும் பலர் ஆளும் உயர் வர்க்கத்தின் ஓர் அங்கமா என்று கேட்டதற்கு, முன்னாள் உளவுத்துறை தலைவரான பிரிகேடியர் இஜாஸ் அகமது ஷா கூறியபோது, “அனைவருக்கும் பொறுப்பு உண்டு. பாகிஸ்தான் இப்போது தனது ஆன்மாவைத் தேட வேண்டும்; சுயபரிசோதனை செய்ய வேண்டும்.” என்றார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) அமர்வின் போது, ஜம்மு-காஷ்மீரை இந்தியா இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சிறைக்கூண்டாக மாற்றிவிட்டதாகக் கூறியதை அடுத்து இஜாஸின் கருத்துக்கள் இப்போது வெளிவந்துள்ளன.
ஷா மஹ்மூத் குரேஷியின் குற்றச்சாட்டுகளை ஐ.நா.வில் இந்தியா நிராகரித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் பற்றிய “இட்டுக்கட்டப்பட்ட கதை” “உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்பகுதியிலிருந்து வருவது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் நாட்டின் மாற்று ராஜதந்திரம் என்று கருதி செயல்படும் ஒரு நாட்டிலிருந்து வருவது’ என்று கூறியது.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச மயமாக்குவதற்கான தீவிர முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து இஸ்லாமாபாத் முகம் சிவந்து காணப் படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிலும் தன் குரல் நசுக்கப் பட்டதை அடுத்து, அந்த நாடு இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க முயற்சித்தபோதும், இந்தியாவின் காஷ்மீர் குறித்தான முடிவு சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத் தக்கது.