காது குத்து, கடா வெட்டு, கல்யாணம் என எல்லாத்துக்கும் பேனர். இன்னும் விவாகரத்துக்கு மட்டும் தான் அரசியல் கட்சியினர் பேனர் வைக்கவில்லை என்று, நீதிபதிகள் காட்டத்துடன் கூறினர்.
சாலைகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைப்பது குறித்து நீதிமன்றம் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் விளம்பர பேனர்களால் பெரும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து கீழே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு எடுத்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சட்ட விரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
மேலும், நீதிமன்றம் இது தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அதிகாரிகளின் மெத்தனம்தான் காரணம் என்றும், முன்னர் நீதிமன்றம் கூறிய படி தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இது போல் உயிர்கள் பலியாகாது என்றும் நீதிமன்றம் கடிந்து கூறியது.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கிய போது, பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன் மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்ட விரோத பேனர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்ற போது, சட்டவிரோத பேனர்கள் அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அப்போது அரசுத் தரப்பில், இந்தச் சம்பவம் தொடர்பில், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், லாரி டிரைவர், பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு கூறியது. மேலும், அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறியது.