சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து புதன்கிழமை இன்று திடீரென லிட்டருக்கு 27 காசுகளும், 26 காசுகளும் உயர்ந்துவிட்டது. இவ்வாறு எரிபொருள் விலை அதிகரித்து வரும் காரணத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை இருந்தது. பின்னர் கடந்த 2017 ஜூன் 17 முதல் ஒவ்வொரு நாளும் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கொண்டு வரப்பட்டது.
இதை அடுத்து, கடந்த இரு வருடங்களாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக பொருளாதார மந்த நிலை உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கும் நேரத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சவுதியின் எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் பட்டதால், நிலைமை மேலும் மோசம் அடைந்தது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வில் கொண்டு முடியும் என்று எச்சரிக்கை செய்யப் பட்டது. அதன்படி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பெரிதாக எதிரொலித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆராம்கோ நிறுவனத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.