நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட தேர்வு செய்யப் பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் திமுக அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் வசிக்கும் ஒரு நபரை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது, நெல்லை மாவட்ட திமுக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விக்ரவாண்டி நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் அந்தந்த ஊர்களை சேர்ந்த நபர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், உள்ளூர் நிர்வாகி. அதுபோல் நாங்குநேரி தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளூர் நிர்வாகியை நிறுத்தும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சென்னையில் வசிக்கும் ரூபி மனோகரன் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது .
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். பெரும் பணம் படைத்தவர் தாராளமாக செலவு செய்வார் என்ற காரணத்தால் இவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ரூபி மனோகரன் தேர்வு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் அந்தத் தொகுதியை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், எனவே காங்கிரஸ் கட்சியும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பு அளிக்கும் என்று நினைத்தனர். அது நடக்கவில்லை.
அதிமுக வேட்பாளர் ஹிந்து நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். நாங்குநேரி தொகுதியில் ஹிந்து நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 24 சதவிகிதம் பேர் உள்ளனர். கிறிஸ்துவ நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 8 சதவிகிதம் பேர் உள்ளனர். எனவே இது ஹிந்து நாடாருக்கும் கிறிஸ்தவ நாடாருக்கும் இடையிலான ஒரு போட்டியாகவே அமைந்துவிட்டது.
ரூபி மனோகரன் தனது தேர்வு குறித்து கூறிய போது, நாங்குநேரி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நாங்குநேரி தொகுதி மக்களுக்காக என்னுடைய மீதமுள்ள காலத்தை செலவிட முடிவு செய்துள்ளேன். நாங்குநேரியைப் பொருத்தவரை விவசாயம் சரியாக இல்லை படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தாழ்த்தப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை அவர்களை முன்னேற்றுவதற்காக பாடுபடுவேன். கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வரும். ஸ்டாலின் முதல்வர் ஆவார். அப்போது நாங்குநேரி தொகுதியை மேம்படுத்த நான் பாடுபடுவேன் என்று ரூபி மனோகரன் கூறினார்.
ஏற்கனவே ஸ்டாலின் ஆட்சிக்கு வருவார்; அனைவருக்கும் மூன்று சென்ட் நிலம் இலவசம் என்று கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றார். அதுபோல் ஸ்டாலின் பெயரைச் சொல்லி இங்கும் ஒரு வாக்குறுதி இலவசமாக தொகுதி மக்களுக்கு அள்ளி வீசப்படுகிறது என்று கிண்டல் செய்கின்றனர்.
இதனிடையே, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான மதிமுக.,வின் பொதுச் செயலர் வைகோ.,வை அண்ணா நகர் இல்லத்தில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நான்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெச்.வசந்தகுமார் ஆகியோர் சந்தித்தனர்.
உங்களைப் பற்றிய விபரங்களைப் படித்தேன். நிறைய சாதித்து இருக்கின்றீர்கள். அண்ணன் வசந்தகுமார் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றார். நீங்கள் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ஆவது உறுதி என்று வைகோ அவரை வாழ்த்தியுள்ளார்.
இந்த தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டு அந்த தொகுதி மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவார்களா அல்லது விழிப்புணர்வு பெற்று சரியான நபரை தேர்ந்தெடுப்பார்களா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்.