திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் பிரம்மோத்ஸவத்தின் 9ம் நாளான இன்று (அக்.,8) தீர்த்தவாரியுடன் வருடாந்திர நவராத்திரி – புரட்டாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான நேற்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள, திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத் தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசாமி பவனி வந்து மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மக்கள் வெள்ளம் போல் அலை அலையாய் திரண்டனர். இதனால், விஐபி சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் பொது தரிசனத்தில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோத்ஸவத்தின் நிறைவு நாளான இன்று புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் இன்று இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருடக் கொடி த்வஜ அவரோஹனம் செய்யப் படுவதுடன் இந்த ஆண்டுக்கான புரட்டாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெறுகிறது.