பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மகாபலிபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியாக நடைப்பயிற்சி செய்தார். அப்போது, கடற்கரை மணற்திட்டுகளில் சேர்ந்திருந்த குப்பைகளைக் கைகளில் எடுத்து, குப்பைத்தொட்டியில் போட்டு கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கினார்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து அதிகம் பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போதே, காந்தி ஜெயந்தி நாள் அன்று, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கினார். தொடர்ந்து அதனை செயல்படுத்தும் பணிகளில் இறங்கினார்.
நேற்றும் இன்றும், பிரதமர் மோடி , சீன அதிபருடன் மாமல்லபுரம் பகுதியில் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நேற்று மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, இரவு உணவு ஆகியவை முடித்து பிரதமரும் சீன அதிபரும் அவரவர் தங்கியிருக்கும் இடங்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, பிரதமர் அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். இதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் பதிவுகளில் இது குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.