இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்! அரசு ஊழியர்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை முன்னர் பின்பற்றப்பட்டு வந்தது. ரோஸ்டர் முறையில் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில் இதற்கு மாற்றாக தமிழகத்தில் 2016ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சேவை நிபந்தனைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது (Tamilnadu government servants(conditions of service) act 2016).
இந்தச் சட்டத்தின் படி, தமிழகத்தில் மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், விதிகளுக்குப் புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையை நீதிமன்றத்தால் ஏற்க முடியாது! தமிழக அரசு கையாண்ட இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாகக் கருதப்படும்! எனவே அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்புப் பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது.
மேலும், இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம்! இது தொடர்பான தமிழக அரசின் புதிய சட்டத்திலுள்ள 1, 40, 70 ஆகிய 3 பிரிவுகளும் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் விரோதமானது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த 3 பிரிவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இட ஒதுக்கீடு என்பது, பணி நியமனத்துக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாக்கினர்.