தங்களை பற்றி அவதுாறாக கருத்து கூறிய, நடிகை கஸ்துாரி மீது வி.சி. கட்சியினர் பெரம்பலுார் போலீசில் சமீபத்தில் புகார் அளித்தனர். அதில், கஸ்துாரி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கஸ்துாரி வெளியிட்ட அறிக்கை:
வி.சி.,கட்சியை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். போலீசில் பொய் புகாரும் அளித்துள்ளனர். திருமாவளவனுக்கும், எனக்கும் விரிசலை ஏற்படுத்தவும், பட்டியலினத்தவருக்கு நான் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.
கடந்த வாரம் முகநுாலில், புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அப்பதிவியில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ நான் குறிப்பிடவில்லை.
ஆனால் திருமாவளவன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்தவர்களை பற்றி நான் பதிவிட்டதாகக் கூறி என்னை வம்பிழுக்கிறார்கள். எந்த தனி நபரையோ சாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது, என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது.
இப்படி ஆதாரமற்ற பொய் வழக்கு போட்டால், அதற்கான பின்விளைவுகளை அந்த வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என் கருத்து குற்றம் ஆகிவிடாது. இதுபோன்ற அவதூறு நடவடிக்கைகள் திருமாவளவனுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்.
- என்று அவர் கூறியுள்ளார்.