திருப்பூர் அருகே மிக்ஸியை விற்று சரக்கு அடித்த கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவி, அதை விபத்து என்று கூறி நாடகமாடியது தெரிய வந்ததை அடுத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்!
திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். 49 வயதான இவரது மனைவி உமாதேவி (47 வயது). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்!
இந்தத் தம்பதி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி வெங்கடேஷ் டூவீலரில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த போது, அதில் வெங்கடேஷ் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வெங்கடேசன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்துள்ளார்.
இது தொடர்பாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை வெங்கடேஷ் தாக்கியுள்ளார். இதில் ஆவேசமடைந்த உமாதேவி அருகிலிருந்த கட்டையை எடுத்து வெங்கடேஷ் தலையில் அடித்து உள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்ததையடுத்து உமாதேவியை மங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்!