வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு. ஏற்கெனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவியது அதிமுக அரசு! சுயஉதவிக் குழுக்கள் தொடர்பாக ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அதனால்தான் நாங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது என்றார்.
முன்னதாக, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், அதன் ஒரு பகுதியாகவே பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாகவும் அவர் பேசினார்.
அதிக அளவில் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை அமைந்துள்ளது! தொழில்நகரமான ராணிப்பேட்டையில் மேலும் அதிக அளவிலான தொழிற்சாலைகளை அமைக்க ஆய்வு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். அதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
ரூ. 23 கோடி செலவில் ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3 விரிவுபடுத்தப்படும், 10 கோடி ரூபாயில் ராணிப்பேட்டை பேருந்துநிலையம் மேம்படுத்தப்படும். 30 கோடி ரூபாய் செலவில் வேகமங்கலத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று திட்டங்களை அறிவித்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.