ஐதராபாத் சம்ஷாபாத்தில் இளம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, தடயங்களை அழிப்பதற்காக எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளி என கைது செய்யப் பட்டுள்ள மொஹம்மத் பாஷா மற்றும் மேலும் மூவருக்கு ஆதரவாக எவரும் வாதாட மாட்டோம் என்று மஹபூப்நகர் பார் அசோசியேஷன் தீர்மானம் செய்திருக்கிறது.
ஐதராபாத், சம்ஷாபாத்தில் இரு தினங்களுக்கு முன்னர் முன் இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் சிகிச்சைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பஞ்சர் ஆன நிலையில் உதவுவது போல் வந்து அந்தப் பெண்ணை தனியாக லாரிகள் இருக்கும் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, தடயங்களை அழிப்பதற்காக பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய லாரி டிரைவர் மொஹம்மத் பாஷா மற்றும் உடந்தையாக இருந்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட வேண்டாம் என்று மஹபூப்நகர் பார் அசோஷியேஷன் தீர்மானம் செய்துள்ளது.
இன்று ஐதராபாத்தில் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நகரமாக ஹைதராபாத் மாறியிருக்கிறது என்றும் கூறி, பெரிய அளவில் உள்ளூர்வாசிகள், மாணவ மாணவிகள், பெண்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றுவருகிறது.
இந்தப் பேரணியில், வீவாண்ட் ஜஸ்டிஸ் என்று கூறி, குற்றவாளிகளுக்கு இப்போது கொடுக்கும் தண்டனையே, இது போன்றோருக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றவாளிகளை சிறையில் வைத்து சோறுபோட்டு வளர்க்கும் சிஸ்டம் மாற வேண்டும் என்ற கோஷம் எழுப்பப் பட்டது.
இதனிடையே, என் மகன் குற்றமே செய்திருந்தாலும், அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று முக்கியக் குற்றவாளி என கைது செய்யப் பட்டுள்ள மொஹம்மத் பாஷாவின் தாய் ஊடகங்களில் பேட்டி அளித்தார்.
இதைக் கண்டு கொதித்துப் போயுள்ள சிலர், இது போல் மகனை வளர்த்து வக்காலத்து வாங்கும் தாய்க்கும் தண்டனை தர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்: இதையும் படிங்க…