பெண்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்று சில கருத்துக்களை கூறினேன். ஆண்களைப் போல பெண்களும் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்… என்று கூறினார் பாக்யராஜ்.
பெண்களுக்கு நான் மதிப்பு கொடுப்பவன் என்று நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்தார். கருத்துக்களை பதிவு செய் பட விழாவில் பங்கேற்ற பாக்கியராஜ் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், ஆண்களை மட்டுமே குறை சொல்லக்கூடாது இவ்விஷயத்தில் பெண்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பேசினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது இது தொடர்பாக ஆந்திர மாநில மகளிர் ஆணையம் சார்பில் புகார் தரப்பட்டது.
தமிழக மகளிர் ஆணையத்தில் இருந்து இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பாக்கியராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர்…
பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் கதறியதைப் பார்த்து ஒரு தந்தையாக நான் பதறினேன். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. பெண்கள் ஏன் இந்த அளவு இடம் கொடுத்தனர்… எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்று நினைத்துதான் சில கருத்துக்களை நான் வெளியிட்டேன்.
மற்றபடி நான் எப்போதுமே பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பவன். என் படங்களில் கூட பெண்களை போற்றி உள்ளேன். அவர்களை தவறாக காட்டியதில்லை. என் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் பேச்சுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் சரியான கருத்தை சொன்னதாகவே பலர் எண்ணியுள்ளனர்.
வேலையில் பெண்கள் போட்டி போடலாம் கல்பனா சாவ்லா போல் விண்வெளியில் சாதிக்கலாம், ஆனால் ஆண்களைப்போல் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்.
பெண்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மனைவியைத் தவிர மற்றவர்களை தாயாகவும் சகோதரியாகவும் மதிக்கும்படி தான் நம் கலாசாரம் கற்றுக் கொடுத்துள்ளது. பெண்கள் நெருப்பு போல் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்… என்று தனது பேட்டியின்போது பாக்யராஜ் கூறினார்!