இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார் (இயற்கை எய்தினார்).
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்து உள்ளது தருமபுரம் இங்கே அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை இன்று பிற்பகல் தமது 93 ஆவது வயதில் விதேக முக்தி அடைந்தார்.
சில தினங்களாகவே வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு கண்டு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் பரிபூரணம் அடைந்தார்.
இவர், கடந்த 1926ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்தார். விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார்!
இவர், கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத் தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார். சுமார் அரை நூற்றாண்டுகள் – 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்தவர்.
தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்டு, திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன. காசியில் தருமபுரம் ஆதீன மடம் செய்து வரும் பணிகள் அளப்பரியது. கல்வி, சமுதாயச் சேவைகளிலும் தருமபுரம் ஆதீன மடம் செயலாற்றி வருகிறது.