உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கப் படுவதா என்று கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உட்பட பல மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன! உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல; விருப்ப பாடம் தான் என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்!
மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதற்கு கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், மாணவர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரெஞ்சு மற்றும் இந்தி மொழிகளின் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதலே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட மொழிகள் அங்கே படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடம்தானே தவிர கட்டாயப் பாடம் இல்லை.
தமிழ் மொழியின் பெருமையை வெளியில் கொண்டு செல்ல பிற மொழிகள் தேவைப் படுகிறது. ஏனெனில் அங்கே பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழியை கற்றுக் கொண்டால் வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அது போல இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாகக் கூறுவது தவறு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி உட்பட பல மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.