வெங்காய விலை வெள்ளி தங்கம் போல் காஸ்ட்லி என்று காட்டுவதற்காகவும், தாங்கள் பணக்காரத் தனமான பரிசை மணமக்களுக்கு கொடுக் கிறோம்; குறிப்பாக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் வெங்காயத்தையே பரிசாகக் கொடுக்கிறோம் என்று அரசியல் பரிசாகக் கொடுக்கும் வகையிலும் கடலூரில் நடந்த நிக்காஹ் ஒன்றில் மணமக்களுக்கு, நண்பர்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட பொக்கேவை பரிசாக வழங்கினர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது!
தற்போது வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு உற்பத்தி குறைவு என்றும் மாநிலத்தின் அதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதும் காரணங்களாகச் சொல்லப் படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு சில்லறை விலைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறப் படுகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.180 என்று உள்ளது. இதனால் புதுச்சேரியில் வெங்காயத்தைத் திருடி, ஒருவர் மாட்டிக் கொண்டு, அவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் வெங்காய விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள் வீடியோக்கள் வெளியிடப் ப்ட்டு வருகின்றன.
இந்நிலையில் கடலூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று சாகுல் – சப்ரினா ஆகியோருக்கு நிக்காஹ் நடைபெற்றது. இதில், மணமக்களுக்குப் பரிசாக, அவர்களது நண்பர்கள் ஒரு பொக்கே செய்து கொண்டு வந்து கொடுத்தனர்.
அதாவது, வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் விலையுயர்ந்த பொருளை மணமக்களுக்கு பரிசாகக் கொடுப்பதாக எண்ணி, வெங்காயத்தில் பொக்கே செய்து பரிசாகக் கொடுத்தனர். இந்தப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வெங்காயத்தை நறுக்கினால் கண்ணீர் வரும். இதில் மணமகளுக்கு அல்லது மணமகனுக்கு யாருக்கு கண்ணீர் வரப்போகிறது என்பதை சிம்பாலிக்காக சொன்னார்களோ தெரியாது! அதற்காகத்தான் வெங்காய பொக்கே கொடுத்தார்களோ என்னவோ?!