பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும், தொழிலதிபருமான திருச்சி வி.கே.கண்ணப்பன் (72)
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க்.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் மறைந்த வி.கே.என். கண்ணப்பன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, எம்.பி.சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.