பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.
அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்) ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்றார்.
‘பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால் வழக்கம் போல், இதைப் புரிந்து கொண்டும் புரியாதது போல் அரசியல் ஆக்க நினைத்த திமுக., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் ஆற்றும் உரையை கேட்பதற்காக வரும் 16-ம் தேதி மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அறிவித்தார்.
திமுக மாணவரணி சார்பில் பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கைக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீட்டில் டி.வி. இல்லாத மாணவர்கள் பள்ளிகளில் வந்து பிரதமர் உரையை பார்க்கலாம்: இது கட்டாயமல்ல என்று கூறினார். மேலும், வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது! என்று தெளிவாகவும், மக்களுக்குப் புரியும் விதத்திலும் பதில் அளித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சரும், முதல்வரும் விளக்கமளித்த பின்பும் கூட, அது தனது அறிவுக்கு எட்டாத நிலையில், அல்லது தனக்குப் புரிந்து கொள்ள இயலாத நிலையில், மீண்டும் இன்று ஒரு டிவிட்டர் பதிவினை செய்திருந்தார் மு.க.ஸ்டாலின். அதில்,
பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்? முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் #ADMKantiPPLgovt – என்று கூறியிருந்தார்.
ஆனால், மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டிய அந்த அரசின் சுற்றறிக்கையில், எங்குமே பள்ளிக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை. மாறாக, பள்ளித் தேர்வுகளில் மாணவர்கள் எதிர்கொள்வது குறித்த பிரதமர் உரையை அனைவரும் அன்றைய தினம் தவறாமல் கேட்க அல்லது பார்க்க வேண்டும், அதை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் வீடியோ காண்பதற்கான வசதி இருப்பதால், அதை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், அன்று மின் தடை ஏற்படாத வண்ணம் ஜெனரேட்டர் வசதியும் செய்து கொள்ள வேண்டும் என்று, பள்ளிகளில் இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கான வசதியை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.