சபரிமலையில் மகரவிளக்கு நாளில் மகர ஜோதி தரிசனத்துக்காக, ஐயப்பனுக்கு அணிவிக்கப் படும் திருவாபரணங்கள் கொண்டபெட்டி, நேற்று மாலை பந்தளத்தில் இருந்து புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்து, ஐயப்பனின் திருவாபரணப் பெட்டியை பக்தியுடன் வணங்கினர்.
மகர மாதம் பிறக்கும் நாளை மாலை 6:30க்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
பந்தள ராஜ குமாரனாக அவதரித்து மகிஷியைக் கொன்று மக்களைக் காத்தவர் சுவாமி ஐயப்பன். அவர், பந்தளம் அரண்மனையில் வளர்ந்த காலத்தில் திருவாபரணங்கள் சூடிக்கொண்டு, ராஜ குமாரனாக இருந்தவர். அவர் சபரிமலையில் சென்று யோக ரூபியாய் கோயில் கொண்ட பின்னர், பந்தள மகாராஜா சுவாமி ஐயப்பனைக் காண்பதற்கு அவரது திருவாபரணங்களுடன் சபரிமலை செல்வதாக ஐதீகம். இந்த புராண நிகழ்வின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப் படும்.
இதன்படி, நேற்று பகல் 1 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திரு ஆபரணப் பெட்டி, உலா புறப்பட்டது. இது, நாளை மாலை 6 மணிக்கு சபரிமலை சந்நிதானம் சென்று சேரும்.
சபரிமலையில் தற்போது இந்த வருடத்துக்கான மகரவிளக்கு பூஜைக் காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலை மகர ஜோதி தரிசனம் பொன்னம்பல மேட்டில் நடைபெறும். அப்போது, சுவாமி ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப் படும் ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.