சென்னை:
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவரை பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண் அதிகாரி மீனாட்சி கூறியபோது, பணி நிரந்தரம் தொடர்பாக அமைச்சர் சரோஜாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். அதற்கு அவர் ரூ.30 லட்சம் எனக்குத் தர வேண்டும் என்று கேட்டார். அப்படி லஞ்சம் கொடுக்க மறுத்ததால் என் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக விமர்சித்தார். மேலும் வேலையை விட்டு தானாக ஓடி விடு; இல்லாவிட்டால் உன் நடத்தை சரியில்லை என்று அசிங்கப்படுத்துவேன் என என்னை மிரட்டினார். சரோஜாவும் அவரது கணவரும் சேர்ந்து என்னை மிரட்டினர். நான் அங்கிருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ஆளுநர் முதல் பிரதமர் வரை புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
பெண் அதிகாரியை பெண் அமைச்சர் நடத்தை தொடர்பாக அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியதாக செய்தி வெளியானது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.