இயக்குனர் பாலா, விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் வர்மா படத்தை இயக்கி இருந்தார். இது தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்.
இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பு தரப்புக்கும் இயக்குனர் பாலாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்தப் படத்தை வெளியிடாமல் தயாரிப்புத் தரப்பு நிறுத்தி வைத்தது. பின்னர், கிரிசாயா என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரித்தது. இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது.
இதையடுத்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அறிவிக்காமல் இருக்கும் இயக்குனர் பாலா, ‘ஜோசப்’ என்ற மலையாள படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார். இதில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் கொடைக்கானல் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அவர் ஆர்யா, அதர்வா நடிக்கும் படத்தை அடுத்து இயக்க இருக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகர் சூர்யாவும் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.
‘பாலா இயக்கும் படத்தில், ஆர்யா, அதர்வாதான் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நடிகர் சூர்யா, அவன் இவன் படத்தில் நடித்தது போல, கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார்’ என்று சூர்யாவுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது எனத் தெரிகிறது.